

திருப்புவனம்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் கீழடி அகல் வைப்பகத்தை திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை அனைவரும் அறிந்து கொள்ள, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட தொல் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், அகரத்தில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி, கீழடி அகழ் வைப்பகப் பணிகளை, ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழ்வைப்பகம் செட்டிநாடு கலைநயத்துடன் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப் பணிகள் முடிவடைந்து தொல் பொருட்களைக் காட்சிப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் முக.ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதே சமயத்தில் கீழடி அகழ் வைப்பகத்தையும் திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். சிவகங்கை எஸ்பி செல்வ ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் ஆணையர் சிவானந்தம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மணிகண்டன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சிவ ராமன், கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.