

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து 75 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என சூளுரைத்து, துரோகிகளையும்,எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்து, கல்லும் கனியாகும் கருணையால் மக்களுக்காக அள்ளி அள்ளி நலதிட்டங்களை கொடுத்து எல்லோர்க்கும் அன்னையென தொண்டாற்றி, மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி,சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட ஜெயலலிதாவின் பவள விழா பிறந்தநாளில், நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்." என்று கூறியுள்ளார்.