‘அணிவகுப்புக்கு அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்’ - டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வரும் மார்ச் 5-ம் தேதி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காத வாறு பேரணியை நடத்த வேண்டும்.இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறையிடம் விண்ணப்பிக்க ஆர்எஸ்எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, பிப்ரவரி 12, 19, மார்ச் 5 ஆகிய தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11-ம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால், அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்க கோரி திங்கள்கிழமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதியளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in