2015-16ம் ஆண்டுக்கான பயிர் பாதிப்புக்கு 2.96 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.403 கோடியே 79 லட்சம் இழப்பீடு

2015-16ம் ஆண்டுக்கான பயிர் பாதிப்புக்கு 2.96 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.403 கோடியே 79 லட்சம் இழப்பீடு
Updated on
1 min read

கடந்த 2015-16ல் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்காக 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கு ரூ.403 கோடியே 79 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2015-16ல் தமிழகத்தில் 10 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். அதற்காக காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் 50 சதவீத பங்குத் தொகையான ரூ.51 கோடியே 46 லட்சத்தை இந்திய வேளாண் காப்பீட்டு கழகத்துக்கு தமிழக அரசு வழங்கியது.

2015-16ல் பயிர்க் காப்பீடு செய்து மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 96 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.403 கோடியே 79 லட்சம் கணக்கிடப்பட்டது. இதில் மாநில அரசின் பங்காக ரூ.168 கோடியே 66 லட்சத்தை இந்திய வேளாண் காப்பீட்டு கழகத்துக்கு தமிழக அரசு விடுவித்தது.

அதனைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கு ரூ.403 கோடியே 79 லட்சம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இன்று (மே 23) விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நாகை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 205 கோடியே 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் (ரூ.101 கோடியே 70 லட்சம்), கடலூர் (ரூ.45 கோடியே 15 லட்சம்), திருவள்ளூர் (ரூ.25 கோடியே 38 லட்சம்), சிவகங்கை (ரூ.8 கோடியே 10 லட்சம்), காஞ்சிபுரம் (ரூ.5 கோடியே 26 லட்சம்), ராமநாதபுரம் (ரூ.3 கோடியே 72 லட்சம்), விருதுநகர் (ரூ.2 கோடியே 54 லட்சம்), திருவண்ணாமலை (ரூ.2 கோடியே 5 லட்சம், தஞ்சாவூர் (ரூ.1 கோடியே 42 லட்சம்) என இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in