

தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சித்திரை பவுர்ணமி நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''2021 வரை ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி தொடரும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தமிழகத்தில் ஊழல் அறிமுகம் செய்யப்பட்டதே திமுக ஆட்சியில்தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழகத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களை மறந்துவிட்டு தமிழக அரசு மீது ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.