ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையாது: விக்கிரமராஜா

ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையாது: விக்கிரமராஜா
Updated on
1 min read

ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையும் என சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அண்மையில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏறத்தாழ 1,204 பொருட்களுக்கு வரிவிகிதங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. 80 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல பொருட்களுக்கு நிபந்தனைகளுடன் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த வரிவிலக்கையும் பெறமுடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய மதிப்பு கூட்டுவரிச் சட்டத்தின்படி 589 பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளது. ஆனால், இந்த வரிவிலக்கில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் வரிவிதிப்பதில் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான உணவு தானியங்களுக்கு 5 சதவீதம் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,12,18,28 சதவீதம் என பொருட்கள் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக வரிவிகிதங்கள் குறைவாக இருக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு அறவே வரிவிதிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 28 சதவீதம் வரிவிதிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு ரூபாய்க்கு 28 பைசா வரிகட்ட வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பர்னிச்சர் வகைகள், பெயிண்ட் வகைகள், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 சதவீதமாக இருக்கும் சேவை வரி 18 சதவீதத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வணிகர்களை பொறுத்தவரை ரூ.50 லட்சம் வரை மொத்த விற்பனைதொகை உள்ள வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியிருந்தோம். ஆனால், ரூ.20 லட்சம் வரைதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டி சட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு வணிகர்களையும் பாதிக்கும். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைவர்.

ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையும் என சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. ஜிஎஸ்டி சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த அனைத்து வணிக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எனவே, மத்திய அரசு வணிகர்களை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும்'' என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in