பொள்ளாச்சி வழக்கில் இபிஎஸ்ஸிடம் விசாரணை கோரிய மனு ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரரின் பெயர்கள் வெளியிட்டன. இதனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகாரளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெ். அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு ஜனவரி 12ம் தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளித்தேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல் துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in