டாஸ்மாக் கடையை திறங்கள், வேலையில் சேருங்கள்: அதிகாரிகள் உத்தரவால் தவிக்கும் 10,500 ஊழியர்கள்
தமிழகத்தில் 2,800 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்பட்டதால் 15 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களில் 4,500 பேருக்கு மட்டுமே மற்ற கடைகளில் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில், மற்றவர்களுக்கு ‘கடையைத் திறங்கள், வேலையில் சேருங்கள்’ என அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 6,826 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்தக் கடைகளில் 7 ஆயிரம் மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரம் விற்பனையாளர்கள், 4 ஆயிரம் உதவி விற்பனையாளர்கள் உட்பட 28 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 1,000 கடைகளை மூடியதால் 5,826 கடைகள் செயல்பட்டன.
நீதிமன்ற உத்தரவு, பொதுமக்கள் போராட்டத்தால் 2,800 கடைகள் மூடப்பட்டன. இதில் மூடிய 751 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் தற்போது 3,551 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. மதுரை மாநகராட்சியில் 120 கடைகள் இருந்த இடத்தில் 40 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய கடைகளில் பணிபுரிந்த 15 ஆயிரம் பணியாளர்கள் வேலையிழந்தனர். அவர்களில் 4,500 பேருக்கு மட்டும் மற்ற கடைகளில் தற்காலிகமாக மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களை ‘வாடகைக்கு கட்டிடம் பார்த்து கடையைத் திறங்கள், வேலையில் சேருங்கள்’ என்ற ரீதியில் டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். ஆனால், வாடகைக்கு கடை பார்த்து திறந்தால் அடுத்தநாளே பொதுமக்கள் அங்கு வந்து கடையைச் சேதப்படுத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்து விடுகின்றனர். அதனால், மாற்றுக் கடையைத் திறக்க முடியாமலும், மாற்றுப் பணியும் கிடைக்காமல் வேலையிழந்த ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: வேலை இழந்தவர்களில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பணியை கொடுத்துவிட்டு மற்றவர்களை கடைகளைத் திறக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கின்றனர்.
‘எவ்வளவு கடைகள் இருக்கும், மூடப்படும், எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்கள், ’ என்பதை இறுதிப்படுத்துங்கள் என்றும், டாஸ்மாக் கடைகளை மூடினால் வேறு துறையில் காலிப் பணியிடங்களில் எங்களை பணி நியமனம் செய்ய கொள்கை முடிவு எடுங்கள் என்றும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பணி வழங்காத கடை பணியாளர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தாலும், ஊதியம் வழங்குகிறோம். கடையைத் திறக்க மாற்று கடைகள் பார்க்க சொல்லி உள்ளோம், என்றார்.
உருமாறும் டாஸ்மாக் கடைகள்
டாஸ்மாக் கடைகள் தடை இல்லாமல் இயங்கிய காலத்தில், கிராமப்புறங்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரையும், நகராட்சிகளில் ரூ.5 ஆயிரம், மாநகராட்சிகளில் ரூ.10 ஆயிரம், பெரிய மால்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாடகை கொடுத்தனர். தற்போது பொதுமக்களின் போராட்டதால் கடைகளின் வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், நகராட்சிகளில் ரூ.10 ஆயிரமும், மாநகராட்சிகளில் ரூ.30 ஆயிரம் வரையும் வாடகை கொடுக்கத் தயாராக உள்ளனர். ஆனால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கட்டிட உரிமையாளர்கள் வாடகைக்கு கட்டிடத்தை கொடுக்க தயங்குகின்றனர். மற்றொருபுறம்
மாநகர, நகர மற்றும் கிராம பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை, பார்கள் செயல்பட்ட கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டியும், பராமரித்தும் மற்ற பயன்பாட்டுக்கு வாடகைக்குவிட உரிமையாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
