15 ஆண்டுகளாக ஜவ்வாக நீடிக்கும் உப்பனாறு பாலம் கட்டுமான பணி - புதுவையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரியில் காமராஜர் சாலை - மறைமலையடிகள் சாலைகளை இணைக்கும் வகையில்  உப்பனாறு மீது  பாலம் கட்டும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. படங்கள்: எம்.சாம்ராஜ்.
புதுச்சேரியில் காமராஜர் சாலை - மறைமலையடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாறு மீது பாலம் கட்டும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. படங்கள்: எம்.சாம்ராஜ்.
Updated on
1 min read

புதுச்சேரி: அதிகரிக்கும் நெரிசலை கண்டுக்கொள்ளாமல், புதுச்சேரியில் 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் உப்பனாறு பாலப்பணி நடைபெறுகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து செல்கிறது. இந்த வாய்க்கால் மீது பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது. குறிப்பாக காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க கடந்த 2008-ம்ஆண்டு அரசு திட்டமிட்டது.

இந்தப் பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.3.50 கோடியில் பாலத்துக்கு பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 2016-ல் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன்பெற்று பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் ரூ.7.15 கோடி மாநில அரசு பங்குத் தொகையாகும். பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் சுமார் 50 மீட்டருக்கு பாலம் அமைக்க வேண்டும்.

பாலம் கட்ட மாநில அரசின் பங்கு தொகையில் ரூ.1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி ரூ.6 கோடி வழங்கப்படவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு இறுதியில் பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தியது. இதனால் சுமார் 3 ஆண்டுக்கும் மேலாக பாலப் பணி கிடப்பில் கிடக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், " புதுவையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் அதிகளவு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். அந்த நாட்களில் புதுவை நகரப் பகுதில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பிரதான சாலைகளான காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலையில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் இருப்பதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உப்பனாறு பாலம் கட்டும் பணி முடிந்தால் காமராஜர் சாலை- மறைமலைஅடிகள் சாலை இணைக்கப்பட்டு நெரிசல் சிறிது குறையும் " என்றனர்.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது," விலைவாசி அதிகரிப்பால் அதற்கேற்ப பாலம் கட்டுமானத்துக்கு ஒதுக்கீடு தொகையை உயர்த்த, பணியை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் கோரியுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நீடிக்கிறது" என்றனர். இதனால் இப்பாலப் பணி முடிந்து எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in