சிவகங்கை | இறந்தவர் உடலை எடுத்து செல்வதை தடுத்த வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதைத் தடுத்த வழக்கில் மனித உரிமை ஆணையம் உத்தரவின் பேரில் இழப்பீடு கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேலையூரைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் அருந்ததியர் சமூகத்தினர். என் மனைவி நாகலெட்சுமி உடல் நலக்குறைவால் 4-12-2020 அன்று உயிரிழந்தார். மறுநாள் மனைவியின் உடலை அடக்கம் செய்ய தண்ணீரும், சகதியும் தேங்கியிருந்த நீர் நிலை வழியாகச் சுமந்து செல்ல வேண்டியது இருந்தது.

இதனால் மாற்றுப்பாதை வழியாகச் செல்ல முயன்றபோது அங்கு வசிக்கும் வேறு சாதியினர் தடுத்தனர். இதனால் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் என் மனைவியின் உடல் பலமணி நேரம் மழையில் நனைந்தபடி இருந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக வழக்குப் பதிவு செய்தது. பின்னர் மனித உரிமை ஆணையர் என் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்னும் நிறை வேற்றப்படவில்லை.

எனவே, எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in