சக்கியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தேசிய பட்டியலின ஆணைய உத்தரவுக்கு தடை

சக்கியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தேசிய பட்டியலின ஆணைய உத்தரவுக்கு தடை
Updated on
1 min read

சென்னை: கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளியைச் சேர்ந்த ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில் உள்ள சக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அறநிலையத் துறை சட்டவிரோதமாக, ஆக்கிரமிப்பு எனக் கூறி நிலத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் செய்தார்.

புகாரை விசாரித்த ஆணையம், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உண்மை களநிலவரம் தெரியாமல் தேசிய பட்டியலின ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிவில் நீதிமன்றத்தின் உரிமையை எடுத்துக்கொண்டு ஆணையம் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. எனவே தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்து, தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அறநிலையத் துறை அகற்றலாம் எனவும் அனுமதியளித்தனர். அத்துடன் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in