

தூத்துக்குடி: தமிழுக்கு முதல் எதிரியான திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த அவர் அளித்த பேட்டி: பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை செல்லப் போவதாக அறிவித்து ள்ளார். தமிழைத் தேடி யாத்திரை செல்கிறார் என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்றுதான் அர்த்தம். அப்படி என்றால் தமிழை தொலைத்தது யார்?. திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற உணர்வை அழிக்க வந்தது தான். இதைத்தான் நீதி கட்சியில் இருந்து வந்தவர்கள் கடைபிடித்தார்கள். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்ததால், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வாறு செய்ய முடியாது என்று கூறுகிறார். தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்.
அந்தந்த துறைகளில் தோல்வி அடைந்ததை திமுக அமைச்சர்களே ஒப்புக்கொள்கிறார்கள. இதனால் மக்கள் இனிமேல் திமுகவை திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே, இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தான் தெரிய வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது பற்றி கவலைப் பட தேவையில்லை. ஏனென்றால் ஜீரோவோடு ஜீரோ சேர்ந்தால் ஜீரோ தான். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.