மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை; அரசிடம் ஏப்ரல் மாதத்துக்குள் சமர்ப்பிப்பு: குழு தலைவர் நீதிபதி முருகேசன் தகவல்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம், மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவர்  முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. உடன் குழு உறுப்பினர் எல்.ஜவகர் நேசன்.  படம்: பு.க.பிரவீன்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம், மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. உடன் குழு உறுப்பினர் எல்.ஜவகர் நேசன். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையில், மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்படபல்வேறு தரப்பினரிடம் இக்குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் சென்னை அண்ணாநூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பலர் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கல்விக் கொள்கையில் உயர்கல்விக்கான முக்கியத்துவம், பாடத்திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை அவர்கள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், செய்தியாளர்களிடம் நீதிபதி முருகேசன் கூறியதாவது: அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிலரும், தனித்தனி பாடத்திட்டமே சிறந்தது என்றும் மற்றொரு தரப்பினரும் தெரிவித்தனர். பல்கலை.களுக்குகூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர். உயர்கல்வியில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கியதாக கல்விக் கொள்கை தயாரிக்கப்படும். கல்விக்கொள்கை வரைவு அறிக்கைதயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம். பாலியல் கல்வி குறித்த அம்சமும்வரைவு அறிக்கையில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in