

புதுச்சேரி: பிரதமர் மோடியை விமர்சித்து, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினர் மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில் அருகே நேற்று மாலை இந்த ஆவணப்படம் திரையிடப்படும் என இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு தகவல் அனுப்பினர்.
இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. சீனியர் எஸ்பி தீபிகா தலைமையில் போலீஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டனர். இதனிடையே இந்திய மாணவர் சங்கம் உட்பட சில சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் மாணவர், மாணவியர் விடுதிகளின் நடுவே உள்ள நுழைவு வாயில் உட்புறம் கூடி தங்கள் செல்போன், லேப்டாப்பில் ஆவணப்படத்தை பார்த்தனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழல் நிலவியது.