விருதுநகர் | இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலக கட்டிடம் - கலக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள்

விருதுநகர் | இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலக கட்டிடம் - கலக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள்
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகரில் போதிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் உள்ளன. இதனால் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த 1986-ல் விருதுநகர்-சாத்தூர் சாலையில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறை அலுவலகங்களும் இந்த வளாகத்தில் கொண்டு வரப்பட்டு தற்போதும் இயங்கி வருகின்றன.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆனால், அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் கட்டிடங்களின் நிலையோ பரிதாபத்துக்குரியதாக உள்ளது. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டிடங்கள் உட்பட அனைத்துக் கட்டிடங்களும் பெயர்ந்து விழுந்ததால் அண்மையில் மராமத்துப் பணி நடைபெற்றது.

ஆனால் மற்ற அரசு அலுவல கங்களின் சுவர்களில் விரிசல், சிதைந்து மற்றும் சுவர் உடைந்து விழுவதால் அங்கு அதிகாரிகளும், ஊழியர்களும் அச்சத்துடனே பணிபுரிகின்றனர்.

குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு மேல்தளங்களுடன் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்டக் குடும்ப நல அலுவலகம், மாவட்ட தொழிலாளர் அலுவலகம், உடற்பயிற்சி கல்வி மண்டல ஆய்வாளர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட புதுவாழ்வுத் திட்ட அலுவலகம் ஆகியவையும்,

அக்கட்டிடத்தின் முதல் தளத்தில் நிலஅளவை உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இக்கட்டிடத்தின் 2-ம் தளத்தில் புள்ளி விவரம் துணை இயக்குநர், கைத்தறி உதவி இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மின் ஆய்வாளர் என 14 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆனால், இக்கட்டிடத்தின் உறுதி கேள்விக்குறியாகி உள்ளது. காரணம் கட்டிடத்தின் பல பகுதிகளில் நீர் இறங்கி சுவர்கள் ஊறிப்போய் உள்ளன. பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்தும், இடிந்தும் விழுந்துள்ளன. இக்கட்டிடங்களை முழு மையாக மராமத்து செய்ய வேண்டும் என்றும், புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து அலுவலகங்களை அங்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in