சாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரம்: ஆசிரியருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியையை சாதி பெயர் சொல்லி திட்டியதாக மற்றொரு ஆசிரியருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், இடைச்செருவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியரான சிவகுமார், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததோடு, சாதி பெயரைச் சொல்லி தம்மை தகாத வார்த்தைகளில் பேசியதாக, அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சாந்தி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு இழப்பீடு வழங்கவும், ஆசிரியர் சிவக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சிவக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் சிவக்குமார் தரப்பில், "மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை கவனத்தில் கொள்ளாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும், விரைவாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஆசிரியர் சிவக்குமார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in