சென்னை | பொது கழிவறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சி பொது கழிவறை | கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி பொது கழிவறை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பொது கழிவறைகளை தனியாருக்கு வழங்கவும், பராமரிப்பின் தரத்தைப் பொறுத்து அதற்கான தொகையை வழங்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பொது இடங்களில் 800 க்கும் மேற்பட்ட இலவச பொது கழிவறைகள் உள்ளன. மக்கள் அதிகம் கூடக்கூடிய சுற்றுலாத் தளங்கள் மட்டுமின்றி பேருந்து நிலையம், சந்தைப் பகுதி, போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு திட்டங்களில் ரூ.420 கோடிக்கு புதிதாக கழிவறைகளை அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத நகரமாக சென்னையை அறிவிக்க மாநகராட்சி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளது. மேலும், மக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பொது கழிப்பிட வசதியை உறுதி செய்ய, புதிதாக கட்டப்படும் கழிவறை மற்றும் ஏற்கனவே உள்ள கழிவறைகளை முறையாக பராமரிக்க புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கழிவறைகளை பராமரிக்கும் பணியினை தனியாருக்கு வழங்க மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது. பராமரிப்பின் தரத்தை பொறுத்து பணம் வழங்கும் புதிய முறையில் ஒப்பந்த வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரு குறிப்பட்ட ஆண்டுகள் கழிவறைகள் தனியாருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு பணம் வழங்க key performance indicator முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி கழிவறைகளை தூய்மையாக வைத்து இருத்தல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், விதிகளை முறையாக கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் தனியாரின் பணி ஆய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்ப தொகை அவர்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே, மாநகராட்சி குப்பை அள்ளும் பணி, இந்த முறைப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in