

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் இறப்புக்கு மாவட்ட அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை இரவு நேரத்தில் 50 சதவீத வாகனங்களை மட்டும் இயக்கி, தனியார் ஆம்புலன்ஸூகளுக்கு ஆதரவாக மாவட்ட அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கெடிலம், களமருதூர், ஆசனூர், உளுந்தூர்பேட்டை, சேராப்பட்டு, மாயனூர் ஆகிய பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை சரிவர தொடராததால் அங்கு அவ்வப்போது பிரச்சினை எழுகிறது.
மனு அளித்தும் பயனில்லை
இதைக் கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதன் தொழிலாளர் சங்கம், உழைக்கும் மக்கள் பேரியக்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக ஆர்வலர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 9-ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
அதன் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இப்போது கல்வராயன்மலை கரியாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வந்த பெண்ணின் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்காததால் காலதாமதம் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.