திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கருப்புசாமி, அவரது மனைவி மஞ்சுளா
பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கருப்புசாமி, அவரது மனைவி மஞ்சுளா
Updated on
1 min read

திருப்பூர்: திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன், பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்தாபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(29). இவரது மனைவி மஞ்சுளா (25). தம்பதியருக்கு 1 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள். இந்நிலையில் கருப்புசாமி, திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட வேலப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ரேடியேட்டர் உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இந்நிலையில் அங்கு பணி செய்து வந்த நிலையில் கடந்த ஆண்டு, நிறுவனத்தில் காப்பர் ஒயரை திருடியதாக கூறி நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் கருப்புசாமியை திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

இதையடுத்து பிணையில் வந்தவர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், வழக்கு விசாரணைக்கு ஆஜாராமலும் இருந்து வந்தார். இந்த வழக்கு பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ச்சியாக ஆஜாரகாத நிலையில் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று பல்லடம் நீதிமன்றத்துக்கு வந்த கருப்புசாமி திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். அதேபோல் அவரது மனைவி மஞ்சுளாவும் கையால் பிளேடால் கீறிக்கொண்டார். இதில் இருவரும் காயமடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் தம்பதியரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தம்பதியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in