மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மனநோய், தூக்க மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: தமிழக அரசு

தூக்க மாத்திரைகள் | கோப்புப் படம்
தூக்க மாத்திரைகள் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய்க்கான மருந்துகள் மற்றும் தூக்கத்துக்கான மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர்.

அதில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக்கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் துவக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in