

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உதவி ஆட்சியர் பங்களாவை தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போலி ஆவணங்கள் ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அரசு, வக்பு வாரியம், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை பதிவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசின் சட்ட திருத்தத்திற்கு சார் பதிவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு சொத்து விற்பனை பத்திரம் பதிவானது. அதன் மதிப்பில் சந்தேகம் வந்ததால் துணை ஆட்சியர் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. துணை ஆட்சியர் ஆய்வுக்கு சென்ற போது பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உதவி ஆட்சியர் பங்களா என தெரிய வந்தது. இதுகுறித்து துணை ஆட்சியர் பதிவு துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து பத்திரத்தை பதிவு செய்த (பொறுப்பு) சார்பதிவாளர் கதிரவனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.