

சென்னை: சர்ச்சைக்குரிய மருத்துவ கருத்துகள் கூறியது தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ ‘டிப்ஸ்’ சொல்வதன் மூலம் பிரபலமானவர். சமீபத்தில் அவர்அளித்த சில டிப்ஸ்கள், சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டுநுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்’ போன்ற மருத்துவ கருத்துகளை தெரிவித்தார். இவை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவ குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. இதுதொடர்பாக துறை இயக்குநர் கணேஷ் கூறும்போது, “சித்தமருத்துவ குறிப்பில் இல்லாதவற்றை பேசியது குறித்து, ஷர்மிகா 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும். பொதுமக்கள் தங்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். ‘யூடியூப்’ போன்றவற்றில் வரும் கருத்துகளை பின்பற்ற வேண்டாம்’’ என்றார்.