

குன்னூர்: உபதலை ஊராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த ஊராட்சி உறுப்பினர்கள் கா.மணி, ஹெச்.சந்திரன், ஆர்.சோபனா, பி.பிந்து, டி.ஜெயராணி ஆகியோர் குன்னூர் வட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: உபதலை ஊராட்சி துணைத் தலைவராக செல்லகுமார் மூர்த்தி உள்ளார். இவர், ஊராட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எந்த செயல் திட்டத்தையும் நிறைவேற்றவிடாமல், அவரும், அவர் சார்ந்தவர்களும் தடுக்கின்றனர். பயனாளிகளுக்கு வழங்கவேண்டிய நிதி மற்றும் ஊதியத்துக்கு கையெழுத்திட அவர் அலுவலகம் வருவதே இல்லை.
கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு வெளியில் உள்ள இடங்களுக்கு எடுத்து வரச்சொல்லி, கையொப்பமிட பேரம் பேசிய பின்பே கையெழுத்திடுகிறார். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், பலமுறை தெரியப்படுத்தியுள்ளோம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பதவி நீக்கம் செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.