எனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் கலாம்

எனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் கலாம்
Updated on
1 min read

“தமிழ் மொழிக்கு சீரும், சிறப்பும் ஏற்படுத்தியவர்களில் திருவள்ளுவர், உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகியோர் எனது மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்” என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைரமுத்து மணி விழா, கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:

“தமிழ் மொழியில் எத்தனையோ படைப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், தமிழ் படைத்து காத்து உயர்த்தி வளர்த்ததில் திருவள்ளுவர், உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகிய நால்வர் எனது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.

திருவள்ளுவர், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல் களைப் படைத்து வழிகாட்டியாக உள்ளார். வாழ்வியல் இலக் கணத்தை எந்த நாட்டிற்கும் பொருந்துமாறு வடிவமைத்ததால் அவரை மிகவும் பிடிக்கும்.

தமிழ் தாத்தா என்று அழைக்கப் படும் உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்த் தொண்டு உலகம் உள்ள வரை மறக்க முடியாது. இவரது தமிழ் பணி கடலைவிடப் பெரியது. இவரது சீரிய முயற்சியால் செல்லரித்துப்போய் இருந்த இலக்கிய நூல்கள் காப்பாற்றப்பட்டு நம்மிடையே உலா வருகின்றன.

அடுத்தபடியாக, தமிழுக்கு ஜி.யு.போப் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.

அடுத்தபடியாக, எனது மனங்கவர்ந்தவர் மகாகவி பாரதியார் இரவா கவிதைகளை இயல்பாக பாடியவர். கவி உலகின் புதிய ஒளி ஏற்றியவர். விடுதலை கவிஞரின் வேகமும், வீரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது. எந்நாளும் அழியாத மகாகவி.

1910-ம் ஆண்டிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதை நினைத்து பாடியவர். அவ்வளவு தீர்க்கதரசி. நதிகளின் இணைப்பு குறித்து அன்றே பாடியுள்ளார்.

தொழிலோடு கலை இருந்தாலும் நாட்டில் அறம் நிலவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இவர்கள்தான் தமிழ் வளர்க்க அயராது பாடுபட்டவர்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in