நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து சுவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் கூறிய சுவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர். இதன்பின்னர் கோகுல்ராஜ் வீடு திரும்பாத நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்ததாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8ல-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வழக்கு கடந்த நவம்பர் 25-ம் தேதி மற்றும் டிசம்பர் 1-ம் தேதிகளில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்த சுவாதி, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதனையடுத்து உயர் நீதிமன்றம், உண்மை தகவல்களை மறைத்து சுவாதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். குறிப்பாக தனது புகைப்படத்தை பார்த்து, அது யார் என்றே தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். விசாரணை நீதிமன்ற நீதிபதி முன்பு அவர் அளித்த வாக்குமூலம் மற்றும் சாட்சியமும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அளித்த வாக்குமூலமும் மாறுபடுகிறது.

இதனடிப்படையில் சுவாதி தெரிவிப்பது பொய் என்று தெளிவாகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் அவர் பொய்யான பிறழ்சாட்சி அளித்துள்ளார். எனவே சுவாதி அளிக்கும் வாக்குமூலம் உண்மையானது அல்ல. எனவே, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பதாக உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவை எதிர்த்து சுவாதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் வெள்ளிக்கிழமை (ஜன.6) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in