Last Updated : 04 Jan, 2023 08:04 PM

 

Published : 04 Jan 2023 08:04 PM
Last Updated : 04 Jan 2023 08:04 PM

“ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு” - அன்புமணி ராமதாஸ்

மதுரை: “ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்தோருக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்கவேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. இதில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டாலும், வளர்ச்சி ஏற்படவில்லை.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து தென் தமிழகத்தை வளர்ச்சி பெற தென் மண்டல தொழில் ஆணையம் தொடங்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை 2015ல் அறிவித்து நிறுத்தப்பட்டது. பின்னர் 2019-ல் ஜப்பான் ஜெய்கா நிறுவன நிதி உதவியுடன் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தாலும், இன்று வரை நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு அதற்கான நிதியை மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டில் கட்டி முடிக்கவேண்டும். பாஜக ஆளும் மாநிலத்திற்கு மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது போன்று மதுரைக்கு நிதி ஒதுக்கவேண்டும். ஏற்கனவே 2008 - 2009லும் எய்ம்ஸ் அறிவிக்கப் பட்டு நிதி ஒதுக்கியும், அதுவும் நிறுத்தப்பட்டது.

வைகை அணை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும். வைகைக்கான நீர் வரத்து பகுதியான மேகமலை, வெள்ளிமலை பகுதியி லுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். வைகை ஆற்றில் 72 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்.

மதுரை நகரத்திற்கு ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும். காவிரி, தாமிரபரணி, நம்பியாறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. விரைவில் தொடங்கி முடிக்கவேண்டும். திமுக நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் பாராட்டுவோம்.

ஆன்லைன் ரம்மி என்பது தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினை. இவ்விளையாட்டால் தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதை தடுக்க கடந்த ஆட்சியில் பாமக போராட்டம் நடத்தியதால், அன்றைய முதல்வர் கே.பழனிச்சாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார். திமுகவிடம் பல முறை கோரிக்கை விடுத்த நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்தனர். ஆனாலும், ஆளுநர் கையெழுத்திட மறுப்பு ஏன் என புரியவில்லை. தற்கொலை செய்தோருக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்கவேண்டும். கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். திமுக, அதிமுக ஆட்சியில் முன்னேற்றமில்லை என, மக்கள் எண்ணுகின்றனர். மாற்றத்தை விரும்புகின்றனர். பாமக நிறைவேற்றும். தேர்தல் கூட்டணி என்பது தமிழக வளர்ச்சியை நோக்கி இருக்கவேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நிறை வேற்றும்போது, தமிழகத்தில் அது ஏன் முடியவில்லை. நிதி அமைச்சர் சாத்தியமில்லை என்கிறார். அப்படி எனில் தேர்தல் வாக்குறுதி ஏன் அளிக்கவேண்டும்.

கோவை ஈஷா மையத்திற்கு மத்திய அரசு பல்வேறு சலுகை அளிக்கிறது. காடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அந்த மையத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் இறந்தார். அதுபற்றி முழுமையாக விசாரிக்கவேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு எங்களது கட்சி வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் கே. பழனிச்சாமியின் கருத்துக்கு மட்டுமே நான் பதிலளிக்க முடியும்.

தமிழகத்தில் 2026ல் பாமக கூட்டணியில் ஆட்சி அமைப்போம் 2024 மக்களவை தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசுவோம். அதுவரை கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

திமுக ஆட்சிக்கு நான் மதிப்பெண் அளிக்க முடியாது. ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம்கோடி நிதி ஒதுக்கவேண்டும். நாங்கள் பரபரப்பு அரசியல் நடத்தவில்லை. நாகரிகம், தமிழக வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். 3 மாதத்தில் மட்டும் தமிழக அரசு ரூ. 53 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. ரூ. 6.43 லட்சம் கோடி கடனுக்கு மாதம் 48 ஆயிரம் வட்டி செலுத்தப்படுகிறது. சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு. பாஜக மாநிலத் தலைவர் இன்னும் போலீஸ் அதிகாரியாகவே செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் மதுரை நகரில் சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்டகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே ண்டும், வைகை ஆற்றை பாதுகாக்க சிறப்புத்திட்டம் தேவை உட்பட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x