ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவம்: ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவம்: ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவம் இடம் பெற்றிருப்பதால், அந்த நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி வடிவத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்யக் கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அக்ரி கணேசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், "ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் எண்களை பொருத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய எண் வடிவங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு எண் வடிவங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யப்படாமல் 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி மொழியின் எண் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவத்தை பயன்படுத்தியது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜராக உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், ரூபாய் நோட்டு மதிப்பிழக்கச் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

அப்போது, அந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in