சென்னை தீவுத்திடலில் டிச.28-ல் பொருட்காட்சி தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை தீவுத்திடலில் டிச.28-ல் பொருட்காட்சி தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சியை டிச. 28 முதல் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து பெங்களூரை சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2017-ம் ஆண்டுநடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, அந்த நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பன்வேர்ல்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதிடி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெண்டரில் வெற்றிபெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வரும் டிச.28 முதல் பொருட்காட்சி தொடங்க உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி டிச. 28 அன்று தொடங்க அனுமதியளித்து, ரூ.50 ஆயிரம் அபராதத்துக்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.5-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in