சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் தாய் - சேய் மருத்துவ சிகிச்சை கட்டிடத்துக்கு அடிக்கல்

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் தாய் - சேய் மருத்துவ சிகிச்சை கட்டிடத்துக்கு அடிக்கல்
Updated on
1 min read

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பிலானபுதிய பேறுகால, பச்சிளங் குழந்தைசிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சுமார் 114 ஆண்டுகளை கடந்த சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 2019-ல் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.56 லட்சம் செலவில் ஊடுகதிர் பிரிவு கட்டிடம் கட்டி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் பிளான்ட் உதயநிதி ஸ்டாலின் மூலம்தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாக19 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்டபுதிய யூனிட் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு, அவசர கால பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு ரூ.42 கோடியில்பன்னோக்கு சிறப்பு மருத்துவக் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டாரஅரசு மருத்துவமனைகளில் 477 பல் மருத்துவ பிரிவுகள் உள்ளன. அதில் காலியாக உள்ள 92 பல் மருத்துவர், 80 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரிசுந்தரி, மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) சாந்திமலர், மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தணிகாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in