ஈரோட்டில் தனியார் மகப்பேறு மருத்துவமனை செயல்பட தடை: ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு

ஈரோட்டில் தனியார் மகப்பேறு மருத்துவமனை செயல்பட தடை: ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு
Updated on
1 min read

ஈரோடு: ஈரோட்டில் மருத்துவக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தனியார் மகப்பேறு மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு, ‘சீல்’ வைக்கவும், மருத்துவமனை 15 நாட்கள் செயல்பட தடை விதித்தும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் மகப்பேறு மருத்துவமனையில், மகப்பேறின் போது, தாய் - சேய் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி, மருத்துவ கண்காணிப்பு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தியதில், மயக்க மருந்து மற்றும் தடுப்பூசிகள் காலாவதி ஆகி இருப்பதும், விதிமுறைகளை மீறி படுக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் ஸ்கேன் சென்டருக்கு தனியாக அறை ஒதுக்கப்படாமல், சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு வருவாய்த்துறையினர் நேற்று சீல் வைத்தனர். மேலும், மருத்துவக் குழு தெரிவித்துள்ள குறைபாடுகள் குறித்து, 15 நாட்களுக்குள் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அதுவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in