மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
Updated on
1 min read

புதுச்சேரி: “மக்களவைத் தேர்தல் 2024-ல் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், திராவிட மாயையை அகற்றவும் ரஜினி குரல் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி கடந்த 30-ம் தேதி இறந்தது. நடைபயிற்சியின்போது மாரடைப்பால் கல்வே கல்லூரி அருகே மயங்கி விழுந்து இறந்தது. இந்த இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை உருவ பொம்மையை சிலர் அமைத்தனர். நேற்று இரவு நகராட்சி போலீஸ் பாதுகாப்புடன் யானை லட்சுமி சிலையை அகற்றியது. பொது இடத்தில் அரசு அனுமதியின்றி சிலை அமைத்ததால் அதை எடுத்தனர். இதைத் தடுத்த மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று புதுச்சேரி வந்தார். யானை லட்சுமி இறந்த இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியது: ''மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, புதுச்சேரி மக்கள் மட்டுமில்லாது, பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் அன்பை பெற்றது. யானை மறைந்தபோது நடந்த ஊர்வலமே இதற்கு சாட்சி. யானையை கோயிலில் இருந்து அகற்றவேண்டுமென்று பலர் முயற்சி செய்தனர். கோயில் என்றால் யானை இருக்க வேண்டும். அதனால், மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிதாக யானையை அரசு வழங்க வேண்டும். யானை லட்சுமி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர். அக்கருத்துகள் மேன்மை பெற பாஜக வலிமை பெற வேண்டும். நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கமுள்ளவர்கள். அதனால் திராவிட அரசியலை ஏற்க மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் விருப்பமான புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஆசை நிறைவேறாது" என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in