Published : 09 Dec 2022 06:42 PM
Last Updated : 09 Dec 2022 06:42 PM

கூடலூர் | நீடில் ராக் வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை: கும்கிகள் உதவியுடன் சுற்றிவளைத்த வனத்துறையினர்

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டாரங்களில் வீடுகளை சேதப்படுத்தியும், மூதாட்டியைகொன்ற பிஎம்-2 என்று அழைக்கப்பட்ட மக்னா யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த மக்னா யானை, குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது. பந்தலூர் மக்னா (எம்.பி.-2 ) என அந்த யானைக்கு பெயரிட்டு, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவாலாவை அடுத்த வாழைவயல் பகுதிக்குள் புகுந்து பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து, அவரையும் தாக்கி கொன்றது.

மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தியும், யானை தாக்கி உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை வாங்க மறுத்தும் போராடினர். இதைத்தொடர்ந்து, மக்னா யானையை பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமை வனப்பாதுகாவலர் டி.வெங்கடேஷ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், தலைமை வனப்பாதுகாவலர் டி.வெங்கடேஷ் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப் பாதுகாவலர், 4 வனச்சரகர்கள், 40-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், கால்நடை மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர், யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், முதுமலையில் இருந்து கும்கிகளும் வரவழைக்கப்பட்டன. கடந்த 21-ம் தேதி முதல் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பந்தலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புளியம்பாறை, வாட்சிக்கொல்லி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்புகளை சேதப்படுத்தி, பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை செல்வதை கண்டறிந்தனர்.

கடந்த 18 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேவாலா வாட்சிக்கொல்லி பகுதி குடியிருப்பை சேதப்படுத்திய யானையை, பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டனர். யானையை நெருங்கியதால், ஊசி செலுத்தி பிடிப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்த ஏற்ற இடத்தை தேர்வு செய்த வனத்துறையினர், விஜய், சுஜய், கிருஷ்ணா, வசிம் ஆகிய நான்கு கும்கி யானைகளை கொண்டு, மக்னா யானையை சுற்றி வளைத்தனர். நேற்று பிற்பகல்2 மணியளவில் நீடில் ராக் வனப்பகுதி அருகே மையக்கொல்லி எனும் இடத்தில், இரண்டு மருத்துவர்கள் கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், கும்கி யானை உதவியுடன், மக்னா யானையின் காலில் கயிறு கட்டி வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், மயக்கத்தில் இருந்தயானையை லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காங்கிரஸ்மட்டம் எனும் அடர்ந்த வனப்பகுதியில் மக்னா யானை விடுவிக்கப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x