பிரதமரின் செல்வாக்கு தேர்தல் முடிவில் நிரூபணம்: ஹெச்.ராஜா கருத்து

பிரதமரின் செல்வாக்கு தேர்தல் முடிவில் நிரூபணம்: ஹெச்.ராஜா கருத்து
Updated on
1 min read

சென்னை: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மூலம் ஊழலற்ற ஆட்சி நடத்தும் பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சென்னையில் பாஜக கட்சி தலைமையகத்தில் நேற்று அக்கட்சித்தொண்டர்கள் இனிப்பு வழங்கிகொண்டாடினர். அப்போது, பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த முறை நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் ஊழலற்ற ஒரு ஆட்சியை நடத்தி வரும் பிரதமரின் செல்வாக்கை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து எந்த சர்ச்சையும், விவாதமும் தேவையில்லை என கருதுகிறேன்.டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது வானில் தோன்றி மறையும் ஓர் எரிகல் போன்ற நிகழ்வு ஆகும்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஒரு தற்காலிக வெற்றியாக பார்க்கிறேன். இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. அதுபோன்றுதான் தற்போதைய நிலையும் அமைந்துள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in