Published : 08 Dec 2022 06:43 AM
Last Updated : 08 Dec 2022 06:43 AM

காதல் திருமணம் செய்த தம்பதி குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: தொகையை கட்டாததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமை

பர்கூர் அருகே தொகரப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெளியூர் உறவினர்கள். (கோப்பு படம்)

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கட்டத்தவறியதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமையும் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தைசேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜ். இவரது மகன் கோபி (24). டிப்ளமோ பட்டதாரியான இவர் மத்தூர் அத்திப்பள்ளத்தைச் சேர்ந்தஒரு பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ‘காதல் திருமணம் செய்யக் கூடாது’ என்ற ஊர் கட்டுப்பாட்டை மீறி நாகராஜ் குடும்பத்தினர் காதல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, ஊர் பஞ்சாயத்தை, அதே சமூகத்தைச் சேர்ந்த மணியக்காரரான எம்.அறிஞர் (இவர் பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார்) கூட்டினார். கூட்டத்தில், நாகராஜ் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கட்டத்தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கட்டுப்பாடு விதித்தனர்.

நாகராஜ் அபராதம் கட்டவில்லை. இந்நிலையில், நவ.19-ம் தேதி நாகராஜின் தாய் பாப்பாத்தியம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில், ஊர் கட்டுப்பாடு காரணமாக உள்ளூரைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதுதொடர்பாக நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாவது: எனது மகனுக்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனால், ரூ.25 ஆயிரம் அபராதம் கட்டவில்லை. இதனால், எம்.அறிஞர் உள்ளிட்ட சிலர் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர்.

கடந்த நவ.19-ம் தேதி எனது தாயார் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் ஊர் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது எனவும் மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்தனர். இத னால், வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள் உதவியுடன் எனது தாயாரின் உடலை நல்லடக்கம் செய்தோம் என்றனர்.

ராணுவ வீரரும் நாகராஜின் தம்பியுமான வெங்கடேசன் கூறும்போது, “நான் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஊர் கட்டுப்பாடு காரணமாக எனது தாயாரின் இறுதிச்சடங்கில் உள்ளூர் உறவினர்கள் யாரும் பங்கேற்வில்லை. நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கே இந்த நிலைமை” என்றார். இதுதொடர்பாக மத்தூர் போலீஸார் கூறும்போது, “நாகராஜ் தந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

ஒதுக்கி வைக்கப்பட்ட 6 குடும்பத்தினர்

தொகரப்பள்ளி கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பட்டியலினத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினரை ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக இந்த கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் கூறியதாவது: எனது மகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால், எங்களுக்கும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பல கட்டுப்பாடுகள் விதித்தனர். வெறுப்படைந்து நான் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தேன். அப்போது என்னை சமாதானம் செய்து அபராதத் தொகை தந்துவிடுவதாக கூறி எம்.அறிஞர்மற்றும் சிலர் அழைத்து வந்தனர். ஆனால், இதுவரை பணத்தைக் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x