Published : 08 Dec 2022 06:50 AM
Last Updated : 08 Dec 2022 06:50 AM

மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது: வழக்கின் மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் இன்றைக்கு (டிச.8) தள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்தமானியத்தைப் பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமெனக் கடந்தஅக்.6 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே சாத்தியம். வாடகை வீட்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபிறகு புதிதாக வாடகைக்கு வருவோர் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் தமிழக அரசு, ஆதார் எண்ணுக்குப் பதிலாக வேறு ஆவணங்களை இணைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்க சட்ட ரீதியாக எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்புநிதியத்திலிருந்து நிதி வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலமாக சமூக நலத்திட்டப் பயன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. அதேபோல மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பான விசாரணையை இன்றைக்கு (டிச.8) தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x