

தென்காசி: தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு நாளை காலை வருகிறார்.முதல்வருக்கு ரயில் நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் செல்கிறார்.
தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (8-ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழா முடிந்ததும் காரில் மதுரைக்கு செல்லும் முதல்வர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.