“இதுவரை கிடைத்தது இனிய அனுபவம்” - பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யா சிவா | கோப்புப்படம்
திருச்சி சூர்யா சிவா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்" என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதன்படி, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர், இனி சுமுகமாக தொடருவோம் என்று அறிவித்திருந்தனர். இதனையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு நீக்கப்படுவதாக கடந்த நவம்பர் 24-ம் தேதி அண்ணாமலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in