

சென்னை: “ஆளுநர் பதவி என்பது முதல் குடிமகன் என்பதால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை அம்பேத்கர். அவரது நினைவு நாளை போற்றுவதில், மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நேற்று (நவ.5) புதுவையில் அம்பேத்கர் அவர்களும், மோடி அவர்களும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அம்பேத்கரின் கனவு இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம். ஜி-20 மாநாடு குறித்து வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி, ஆளுநர், துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜி-20 மாநாட்டின் பெருமை குறித்து கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தெலங்கானா மற்றும் புதுவையில் நடத்த இருக்கிறோம்.
ஆளுநர் பதவி என்பது ஒரு முதல் குடிமகன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கு தொடர்வது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து" என்று அவர் கூறினார்.