

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3(குரூப்-3ஏ) பணிக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜன.28-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு மையங்களிலும் தேர்வானது நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் தற்போது 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ஊட்டி, திருச்சி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.