Last Updated : 03 Dec, 2022 02:04 PM

1  

Published : 03 Dec 2022 02:04 PM
Last Updated : 03 Dec 2022 02:04 PM

நரிக்குறவர் பெயரில் உள்ள ‘குறவர்’ நீக்கப்படுமா? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நரிக்குறவர் பெயரில் குறவர் என்றிருப்பதை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் (எ) முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "தமிழை பூர்விகமாகக் கொண்டு மலைப் பகுதியில் வசிப்பவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழகத்தில் குறவர்கள் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். தற்போது குறவர்கள் மலைப்பகுதியில் இருந்து சமதள பரப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் உண்டு.

எம்பிசி பட்டியலில் 1951-ல் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்கள் அப்படியில்லை. இவர்கள் ஆந்திரா, குஜராத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் சமயம், பழக்க வழக்கம், திருமண முறைகள் குறவர்களை விட மாறுபட்டது.

நரிக்குறவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். நரிக்குறவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்களை நரிக்குறவர் என அழைக்கக்கூடாது. அதற்கு பதில் அவர்களை நரிக்காரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே பெயர்களில் அழைக்ககலாம்.

குறவர், குறவன் என்பது எங்களின் தனிப்பட்ட பெயராகும். வேறு பெயர்களில் உள்ளவர்களை நரிக்குறவர்கள் என அழைக்கும் போது எங்களது கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என இருப்பதில் குறவர் என்பதை நீக்கவும், நரிக்குறவர்களை குருவிக்காரர் என அழைக்கவும் உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன். ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x