போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற 1,241 பேருக்கு பணப்பலன்கள்: அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற 1,241 பேருக்கு பணப்பலன்கள்: அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற 1,241 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன் காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது.

நிகழ்வில் 22 பேருக்கு காசோலைகளை அமைச்சர் நேரடியாக வழங்கினார். இதேபோல் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என 1,241 பேருக்கு காசோலைகள், அந்தந்த போக்குவரத்துக் கழக நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020 மே மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள், இறந்த பணியாளர்கள் என மொத்தமாக 1,241 தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களாக ரூ.242.67 கோடியை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் இன்று (டிச.1) முதல்கட்டமாக 22 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்தந்த போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் மூலமாக மீதமுள்ள 1,219 பேருக்கு இந்த காசோலைகள் வழங்கப்படும். போக்குவரத்துத் துறையில் ஏற்கெனவே நிதிச்சுமை உள்ளது. இருப்பினும் மீதம் உள்ளவர்களுக்கு நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in