

விழுப்புரம்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில் திண்டிவனம் அருகே ஒலக்கூர், ரோஷனை மற்றும் செஞ்சி காவல் காவல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், குற்ற வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை, சாலை விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷிணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும், காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். காவலர்களுக்கு வார விடுமுறையை முறையாக வழங்க காவல் நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.