சென்னை புறநகரில் அமையவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். படம்: எம்.முத்துகணேஷ்
சென்னை புறநகரில் அமையவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். படம்: எம்.முத்துகணேஷ்

வண்டலூர் | கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கலுக்குள் திறக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல்

Published on

வண்டலூர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.

வண்டலூர் அருகே நடைபெறும் கிளம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போதுஅவர் கூறும்போது, "ரூ.393.70 கோடியில் நடந்து வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டமைப்பு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளன.

அனைத்து பணிகளையும் முடித்து வருகிற பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். மேலும் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்

இதேபோல் பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58சென்ட் பரப்பளவில் சுமார் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20,971 மதிப்பீட்டில் 116 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26அறைகளும் எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒருபிரிவாகவும் 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் கூறியது: இந்த கட்டிடம் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்தால் இந்த கட்டிடத்தின் அருகே உள்ள13.73 ஏக்கர் பரப்பளவில் காலிமனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டம் உள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறு சீரமைக்கவேண்டிய நிலையில் உள்ளது. அதற்கான பணியும் நடந்து வருகிறது. ரயில்வே துறையில் வாங்கவேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in