

கன்னியாகுமரியில் குடிநீர் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரமாக ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதேநேரம் போதிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
அதிக கட்டணம்
கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் பகவதியம்மன் கோயில் வளாகம், கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம் பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு முகம் சுழிக்க வைக்கிறது.
கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமன மையங் களில் கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. குறிப்பாக பகவதியம்மன் கோயில் பின்புறம் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாகவே உள்ளன. இதனால் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
வருத்தம் அளிக்கிறது
திருச்சியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கூறும்போது, ‘கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் காலியாகவே உள்ளன. தண்ணீர் இருக்கும் ஒருசில தொட்டிகளிலும் குவளைகள் வைக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்றனர்.