

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் நேற்றிரவு தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் நேற்றிரவு தொடங்கியது. இதையொட்டி, சின்ன கடை வீதியில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சந்தன காப்பு அலங்காரம் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து உற்சவரான அம்மன், காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துர்கை அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, பிடாரி அம்மன்உற்சவம் இன்று இரவு நடைபெறவுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தங்கக் கொடி மரம்அருகே உள்ள பிடாரி அம்மன்சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றதும், பிடாரி அம்மனின் உற்சவம், மாட வீதியில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை விநாயகர் உற்சவம் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த காவல்தெய்வமான துர்கை அம்மன் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றதால், பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.