தனுஷ்கோடிக்கு 10 பேர் அகதிகளாக வருகை: இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆனது

மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட 10 இலங்கை தமிழர்கள்.படம்: எல். பாலச்சந்தர்
மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட 10 இலங்கை தமிழர்கள்.படம்: எல். பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டிலிருந்து 10 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், வாழ்வாதாரம் தேடி கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் 199 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த உதயசூரியன் (47) அவரது மனைவி பரிமளாதேவி (44) மகன் தீமோத் (23) டிலாக்சன் (17) ஜோயர் (12), வவுனியா மாவட்டம் பூவரங்குளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி ( 44), மகன் விபூஷன் (24) சுதர்ஷா (04), வவுனியா மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த ரீகன் (17) மற்றும் யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியைச் சேர்ந்த நிதர்ஷன் (20) ஆகிய 10 பேர் தலைமன்னாரிலிருந்து நேற்று முன்தினம் இரவு படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவலறிந்து தனுஷ்கோடி சென்ற மெரைன் போலீஸார், அகதிகளாக வந்த 10 இலங்கைத் தமிழர்களை மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு கட்டணமாக இலங்கை பணம் ரூ.1.65 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை படகோட்டியிடம் கொடுத்ததாகத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு இதுவரை வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in