

சென்னை: சட்டவிரோத குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல்குற்றப்பத்திரிகையில் உள்ள குறைகளை திருத்தம் செய்து தாக்கல் செய்ய சிபிஐ போலீஸாருக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றினர்.
அப்போது தமிழக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த ஊழல் சர்ச்சையில் சிக்கினர்.
இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிசெந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்தாண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் அதில் இடம்பெறாத நிலையில் சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு தமிழக அரசு கடந்த ஜூலையில் அனுமதி வழங்கியது.
அதன்படி 11 பேருக்கு எதிராக சிபிஐ போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை சென்னை 8-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.மலர் வாலண்டினா முன்பாக தாக்கல் செய்தனர். ஆனால், அதில் பல்வேறு குறைகள் இருந்ததால் அதை திருத்தம் செய்து முறையாக தாக்கல் செய்ய சிபிஐ போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் டிச.15-க்கு தள்ளி வைத்துள்ளார்.