Last Updated : 23 Nov, 2022 03:07 PM

 

Published : 23 Nov 2022 03:07 PM
Last Updated : 23 Nov 2022 03:07 PM

பதவி இறக்கம் பிரச்சினை: அண்ணாமலை பல்கலை. தனி, தொடர்பு அலுவலர்கள் உண்ணாவிரதம்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் சுமார் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களை உதவி பிரிவு அலுவலர்கள் என்ற பெயரில் பதவி இறக்கம் செய்து சம்பளத்தைக் குறைத்து பணி நிரவல் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி பல்கலைக்கழகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் தனி அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் பதவி இறக்கம் குறித்து தீர்மானம் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனை அறிந்த தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் அன்று (நவ.17) காலை 11 மணி அளவில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு போலீசார் வைத்திருந்த தடுப்புக்கட்டைகளை ஆவேசமாக தள்ளிவிட்டு நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், இன்று (நவ.23) காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே தனி மற்றும் தொடர்பு தொடர்பு அலுவலர்களின் கூட்டமைப்பின் சார்பில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு மட்டும் காழ்புணர்ச்சியுடன் பாரபட்சமாக வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டம் 2013 பிரிவு 58 (3)-க்கு புறம்பாக 22-9-2022 அன்று நடந்த ஆட்சிமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான எண்: 25 மற்றும் அதனை தொடர்ந்து 17-11-2022 அன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும், தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளை ஊதிய பாதுகாப்புடன் மற்ற பணியாளர்களுக்கு வழங்கிய பணி நிரவல் செய்தது போல செய்ய வேண்டும், தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு மட்டும் கடந்த ஜனவரி 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனி மற்றும் தொடர்பு அலுவலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனி மற்றும் பிரிவு அலுவலர்கள் பணி இறக்கம் செய்யப்பட்டு உதவி பிரிவு அலுவலர் பணி வழங்கப்பட்டால் ரூ 15 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை சம்பளம் குறையும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x