Published : 23 Nov 2022 07:28 AM
Last Updated : 23 Nov 2022 07:28 AM

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு கேபிள் டிவியின் சேவையை வழங்க தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

சென்னை: அரசு கேபிள் டிவியின் கேபிள் சேவையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழங்க வேண்டுமென தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், பொதுமக்களுக்கு தரமான செட்டாப் பாக்ஸ்களை வழங்குவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி ரூ. 614 கோடி மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்து அவற்றை பராமரிக்கும் சேவைகளை வருடாந்திர அடிப்படையில் இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் இந்த நிறுவனங்கள் ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடிக்கவில்லை எனக்கூறி தமிழக அரசு ரூ.52 கோடியை நிறுத்தி வைத்துக்கொண்டு, எஞ்சியதொகையை மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தொகையை வழங்கும்படி அந்த நிறுவனங்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் வழங்கப்படாத நிலையில், அரசு கேபிள் டிவி சேவைக்கான செட்டாப் பாக்ஸ்களின் மென்பொருளை இந்த நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக முடக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அரசு கேபிள்டிவி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வி.எஸ்.ராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீ்ந்திரன் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது அவர் அரசு கேபிள் டிவியின் செட்டாப் பாக்ஸ் மென்பொருளை பராமரித்துவரும் தனியார் நிறுவனங்கள் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை மத்தியஸ்தர் மூலமாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் அதைமீறி அந்த நிறுவனங்கள் கேபிள் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் மென்பொருளை தொழில்நுட்ப ரீதியாக முடக்கியதாகவும், எனவே இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

90 நாட்களுக்குள் தீர்வு: அதையேற்ற நீதிபதி, ‘‘ கட்டணம் தொடர்பான பிரச்சினைக்காக அரசுகேபிள் டிவியின் சேவையைமுடக்குவது என்பது ஏற்புடையதல்ல. அரசு கேபிள் சேவையில் இடையூறு ஏற்படுத்துவது சட்டப்படி தவறு. இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தர் மூலமாக 90 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும். அரசுக்கு கேபிள் டிவியின் சேவையை இடையூறு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுஉள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x