கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்
Updated on
1 min read

கோவில்பட்டி: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக்கூறி, பதவியில் இருந்து விலகுவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் கட்சிக்குள் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்று பேசிஉள்ளனர். அப்போது, காயங்கள் ஏற்படும் அளவுக்கு சில குண்டர்களால் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர்.

மறுநாள் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்ற போது, மாநிலத் தலைவர் கலந்துகொள்ளவில்லை. ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுத்தால் தான் வருவேன் எனக் கூறிவிட்டார்.

ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை? - மாநிலத் தலைவரை சந்திக்க செல்லும் கட்சியினரை கன்னத்தில் அறையும் காட்சிகளும் அரங்கேறிஉள்ளன. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பிரச்சினைக்கு தலைவரும், பொருளாளரும் தான்பொறுப்பு. ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரியானது அல்ல. தமிழகத்தில் மாநிலத் தலைவருடன் உள்ள சில குறிப்பிட்ட நபர்கள் பணம் பெற்றுக் கொண்டு நிர்வாகிகளை மாற்றுகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோது, தமிழக முதல்வர் அவரை கட்டியணைத்து வரவேற்ற செயலுக்கு தமிழக காங்கிரஸ் பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேபோல் தற்போது 6 பேர் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. மாவட்டத் தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் பலமுறை கேட்டபோதும் சரியான பதில் இல்லை.

கட்சி அடிமட்டத்தில் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல், விலை உயர்ந்த கார்களில்வலம்வந்து, பணம் வைத்திருப்பவர்களை மட்டும் சந்தித்து இயக்கத்தை நடத்தும் நிலையில்தான் கே.எஸ்.அழகிரி உள்ளார். அவர்வட்டார மற்றும் நகரத் தலைவர்களை பார்ப்பது கிடையாது. அடிமட்ட நிர்வாகிகளுக்கு எந்தஉதவியும் செய்வதில்லை.

தலைவரும், பொருளாளரும் செய்த தவறுக்கு பொருளாளர் மீது மட்டும் நடவடிக்கை என்பது என்ன நியாயம். எனவே, மாவட்டத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாநில தலைவருக்கு தபால் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.திருப்பதி ராஜா, மாவட்ட பொருளாளர் ஆர்.கார்த்தி காமராஜ் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in